Sunday, September 25, 2011

இந்திய அரசியல்வாதிகள் வெளிநாட்டில் வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் ஒரு நபருக்கு 3 லட்சம் - ஸ்ரீ ரவிசங்கர் ஜி






தூத்துக்குடி : இந்திய நாட்டில் உள்ள அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள கருப்புபணத்தை கொண்டு வந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் 3 லட்ச ரூபாய் இலவசமாக கொடுக்க முடியும் என்று தூத்துக்குடியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட பிரமாண்ட ஆனந்த சங்கமத்தில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி மைதானத்தில் நேற்று வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர்ஜியின் ஆனந்த சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாலை 6.55 மணிக்கு மேடைக்கு வந்த குருஜி மக்களுக்கு ஆசி வழங்க போடப்பட்டிருந்த நீண்ட மேடையில் வந்து மக்களை பார்த்து கையசைத்தார். மக்கள் கொடுத்த பூக்கள் போன்றவற்றை வாங்கி அணிந்து கொண்டார். பின்னர் அதனை பக்தர்களிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து கிறிஸ்தவ அருட்சகோதரிகள் சார்பில் வழங்கப்பட்ட புறாவை குருஜி பறக்க விட்டார்.


இதனை தொடர்ந்து குருஜி ரவிசங்கர் ஜி பேசியதாவது; தூத்துக்குடியில் குறுகிய காலத்தில் இதுபோன்ற மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் குறுகிய காலத்தில் நம் நாட்டை நோய் இல்லாத ஆன்மிக நாடாக மாற்ற முடியும். அதற்கான முயற்சிகள் தான் தற்போது செய்யப்பட்டு வருகிறது. ஆன்மிகம் என்றால் பஜனை பாடுவது ஆன்மிகம் கிடையாது. எல்லோரும் அன்புமனப்பான்மையுடன் இருப்பது தான் ஆன்மிகம். அன்பே சிவம். அன்புக்கு சமமான சக்தி உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. ஆழமான தியானம் பண்ணினால் அன்பு கிடைக்கும். அநியாயத்தை ஒழிக்க வேண்டும். அதனை எதிர்த்து ஒன்றுபட்டு மக்கள் நிற்க வேண்டும். அகம்பாவம் இருக்கவே கூடாது. எந்த காரணம் கொண்டும் என்னிடம் ஒன்றும் இல்லை என்கிற இல்லாமைப்பாட்டு பாடக் கூடாது. இல்லாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். இதற்கு சிரமப்பட்டு வேலைகள் செய்ய வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தம் ஒழிக்கப்பட வேண்டும். நம் வீட்டையும், நாட்டையும், ஊரையும், மனதையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது தான் நாம் கடவுளுக்கு செய்கிற நன்றியாகும். 30 ஆண்டுகளாக இதற்காக முயற்சி செய்து வருகிறோம். எத்தனையோ நாடுகளுக்கு சென்று பயிற்சி அளித்து வருகிறோம். இதில் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது.


நம் நாட்டில் மட்டும் தான் மனிததன்மையை அதிகமாக பார்க்கிறோம். அதுவும் நம் நாட்டில் உள்ள கிராமங்களில் தான் அதனை அதிகம் பார்க்கிறோம். மற்ற நாடுகளில் இது இல்லை. ஜப்பான் நாட்டை பொறுத்தமட்டில் எல்லோரும் சேர்ந்து உழைப்பார்கள். லீடர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். ஜெர்மன் நாட்டை பொறுத்தமட்டில் எந்த வேலையை சொன்னாலும் அதனை பெர்பெக்டாக செய்து முடிப்பார்கள். இதற்காக நேரம், காலம் பார்க்க மாட்டார்கள். இந்த நாடுகளில் இருந்து நாம் இதனை கற்றுக்கொள்ள வேண்டும்.


பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்தவர்களிடம் நல்ல பண்பாடு உள்ளது. அதனை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினரிடம் வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அமாவாசை என்று சந்திரனை அமெரிக்கர்கள் விற்பனை செய்து விடுவர். வியாபாரத்தில் அவர்கள் அவ்வளவு கில்லாடி. அவர்களை அதில் மிஞ்ச முடியாது.


கடனில் மூழ்கிற நிலையில் அணுமின் திட்டங்களை நம்மிடம் 60 பில்லியனுக்கு நம்மிடம் விற்று விட்டு சென்று விட்டனர். இதுபோன்ற அணுமின் திட்டத்தால் தற்போது கூடங்குளத்தில் மக்கள் உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டிய நிலை வந்தது. நாட்டு நலனுக்காக மக்கள் போராட முன் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். இதன் மூலம் புதிய யுகம் ஆரம்பித்துள்ளது. நாட்டு நலனுக்காக மக்கள் போராட வேண்டும். நம் வேலையை பார்த்து விட்டு நாம் போவோம். அதில் ஏன் தலையிட வேண்டும் என்று இருக்க கூடாது. எதற்கும் மக்கள் எழுந்து நிற்க வேண்டும். இதன் மூலம் வெற்றி காண முடியும்.
அரசியல் வாதிகளை பொறுத்தமட்டில் முதலின் நான், அதற்கு பிறகு கட்சி. அதற்கு பிறகு தான் மக்கள் என்று நினைக்கின்றனர். இதனால் தான் குட்டி சுவராகி விட்டது. நாடு கடனில் மூழ்கும் நிலையை இவர்கள் உருவாக்கி விட்டனர். இதனை தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் வாழும் கலை அமைப்பு சார்பில் 14 நாடுகளில் 54 மிகப் பெரிய நகரங்களில் நாட்டை காப்பாற்ற உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. உறுதி மொழி என்றால் ஊழலை அனுமதிக்க மாட்டோம் என்கிற உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. கொடுத்தால் தானே வாங்குவார்கள். கொடுக்கமாட்டேன் லஞ்சம் என்று உறுதிமொழியை மக்கள் எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தான் லோக்பால் மசோதாவும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.


அன்னாஹசாரேவுடன் சேர்ந்து நானும் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாழும் கலை அமைப்பு பல நாடுகளில் இருப்பதால் அவர்கள் இதுபோன்று அனைத்து நாடுகளில் ஆதரவு தெரிவித்து பிரச்னை ஏதேனும் வந்துவிடும். அதன் மூலம் நம் நாட்டிற்கு கெட்ட பெயர் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் உண்ணாவிரதம் இருக்கவில்லை. தியான பயிற்சியின் மூலம் வாழ்க்கையில் நல்ல அமைதியை காணமுடியும். இனிமையை கொண்டுவர முடியும். அன்பு மயமான வாழ்க்கை வருவதற்கு கண்டிப்பாக எல்லோரும் தியானம் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் நம் நாட்டு அரசியல் வாதிகளும், தொழில் அதிபர்களும் கருப்பு பணம் மிக அதிக அளவில் வைத்துள்ளனர். இந்த பணம் குறித்து கணக்கு போட முடியாது. 3 பில்லியன் டாலர் என்கிறார்கள். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை சீரோ போட்டாலும் முடியாது.
அரசியல் வாதிகள் நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் சென்று பணத்தை முதலீடு செய்கின்றனர். இது மிகப் பெரிய வன்முறை. நாட்டிற்கு செய்யக் கூடிய தேசதுரோகம். வெளிநாட்டில் உள்ள கருப்புபணத்தை திருப்பி கொண்டு வந்தால் இந்திய நாட்டில் உள்ள ஒரு குடிமனுக்கும் 3 லட்ச ரூபாய் பணத்தை இலவசமாக கொடுக்கலாம். 30 ஆண்டுகளுக்கு வரி கட்ட வேண்டாம். அவ்வளவு கருப்பு பணத்தை குவித்து வைத்துள்ளனர். அரசியலில் நாம் தலையிடக் கூடாது என்கின்றனர். ஊழல் பண்ணாமல் இருந்தால் தலையிட மாட்டோம். ஊழல் இருப்பதால் தலையிட்டு தான் ஆக வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டிய முயற்சிகளில் இறங்கத்தான் வேண்டியுள்ளது. அதில் முழு பயனும் கிடைக்கும் வரை தொடர்ந்து தலையிடுவோம். ஊழலை எதிர்த்து நிற்பது தான் மனிதத்தன்மை. ஊழல் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் மனித தன்மை முடியும் இடத்தில் துவங்குகிறது. நம்முடன் சேர்ந்தவர்களிடம் லஞ்சம் வாங்க முடியாது. அதே போல் யாரிடமும் வாங்க கூடாது என்கிற நிலை வரவேண்டும். அதற்கு ஆன்மிக புத்துணர்ச்சி உண்டாக வேண்டும். எல்லா ஜாதியும், மதமும் ஒன்று தான். நாம் எல்லோரும் ஒன்று என்கிற எண்ணம் மனதில் வர வேண்டும்.ஒரே கடவுள் தான். பலவித வழிபாடுகள் மூலம் நாம் வழிபடுகிறோம். பாகிஸ்தானுக்கு சென்ற போது என்னிடம் கேட்டனர். எத்தனையோ கடவுளை வழிபடுகிறார்களே என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நாங்கள் நீங்கள் ஏன் கோதுமை உணவில் சமோசா, சப்பாத்தி, அல்வா என்று பல பொருட்களை தயார் செய்து சாப்பிடுகிறீர்கள். அது போல் தான் இதுவும் என்றேன். கடவுள் ஒருவர் தான். ஆண், பெண், குழந்தை என்று பல ரூபத்தில் நாம் வழிபடுகிறோம். எல்லாவற்றிலும் இருப்பது ஒரே பரம்பொருள் தான். இல்லாமையை போக்க வேண்டும். அசுத்தத்தை ஒழிக்க வேண்டும். அறியாமை போக்க வேண்டும். அகங்காரத்தை ஒழிக்க வேண்டும். அகந்தை இல்லாமல் இருந்தால் அமைதியும், பேரின்பமும் உண்டாகும். இதனை நினைத்து நடக்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர்ஜி பேசினார்.


பின்னர் மக்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்து சுவாமிஜி பேசியதாவது; 
கே. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் எப்படி வசிகரம் செய்துள்ளீர்கள்.
ப. நான் யாரையும் வசிகரம் செய்ய போவதில்லை. நான் வளராத குழந்தை.
கே. திவ்யசமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும்.
ப. குடி, வன்முறை இல்லாத நன்றாக இருக்கும் சமுதாயம் தான் திவ்யசமுதாயமாகும். அதனை நாம் உண்டாக்க வேண்டும். மகராஷ்டிரா மாநிலத்தில் வாழும் கலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அந்த கிராமத்திற்கு சென்று பயிற்சி அளித்து 150 கோர்ட் வழக்குகளை வாபஸ் வாங்க செய்துள்ளார். 
கே. நாடு சுபிட்சமாக இருக்க என்ன செய்ய வேண்டும்.
ப. ஊழல் இல்லாமல் இருந்தால் நாடு சுபிட்சமாக இருக்கும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கும். 
கே. ஆன்மிகம் விஞ்ஞானமா, வேதாந்தமா
ப. இரண்டும் சேர்ந்தது தான் ஆன்மிகம்
கே. கவனிக்கும் சக்தி, ஞாபசக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
ப. நல்ல விளையாட வேண்டும். உடலில் வியர்வை அதிகமாக வரும் வரை விளையாட வேண்டும். படி, படி என்று குழந்தைகளை சொல்லக் கடாது. கசப்பாக ருசி இல்லாவிட்டாலும் ஆயர்வேத, மூலிகை மருந்துகளை சாப்பிட வேண்டும்.டேஸ்டாக இருக்கிறது என்று எண்ணெய் பலகாரங்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. அதன் மூலம் நோய் தான் ஏற்படும். 
கே. ஆன்மிகம் என்ற போர்வையில் போலிச்சாமியார்கள் உலா வருவது பற்றி
ப. ராவணன் கூட சீதையை கடத்தியுள்ளான். போலி வேடம் போட்டு பொய், பிரபகண்டா செய்பவர்களை மக்கள் நம்ப கூடாது. மக்களின் எல்லா கஷ்டத்தையும் தான் ஏற்றுக் கொண்டு மக்கள் அமைதியாக, சந்தோஷமாக வாழ வைப்பவர்கள் தான் ஆன்மிகவாதிகள்.வாழும் குறைந்த காலத்தில் சந்தோஷமாக வாழ வேண்டும். அதனை தான் வாழும் கலையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தூத்துக்குடியை சுத்தமாக வைத்திருக்க ஒவ்வொருவரும் மாதத்தில் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கி பொது சேவை செய்ய வேண்டும். இவ்வாறு ரவிசங்கர்ஜி பேசினார்.

No comments: